Montag, Juli 30, 2012

சபா நாவலன் சொல்லும் தேசிய இனப்பிரச்னையில்...( 2)

"தேசிய இனப்பிரச்சனையில் ஏகாதிபத்தியங்களின் சதி" என்ற சபா நாவலனது நூலுக்கான விமர்சனத்தின் இரண்டாவதுவது பகுதி இது.

நீண்டவொரு விமர்சனத்தின் எழுத்தோட்டத்துள் பாரிய எழுத்து-வாக்கியப் புணர்வுப் பிழைகளென ஏராளமான தவறுகள் மலிந்துகிடக்க,அவற்றைத் தறுவாக வாசித்துத் திருத்துவதில் பல மணி நேரம் விரையமாச்சு!

வாசிக்க-வாசிக்க, நீண்டுகொண்டே செல்லும் இந்த விமர்சனத்தை எழுதிய தமிழரசன் சுயமாகத் தமிழில் தட்டச்சுச் செய்யவில்லை! இதைத் தட்டச்சேற்றியவர் பல தவறுகளைக் கையெழுத்துப் பிரதியிலில்லாததையெல்லாம் செய்திருக்கிறார்.

வரலாற்று நிகழ்வுகளையும்,சமூக அசைவியகப்பாட்டின் வினைக்கூர்ப்புகளையும் வரலாற்றியங்கியலது புள்ளியில் வைத்து விமர்சனமொன்றைத் தருவது, பாரிய தகவற்றொடுப்புகளுடனேயே சாத்தியமாகமுடியும்.அன்றைய காலத்தரசியற்போக்குகளைத் தீர்மானித்த அதீதமான காலனித்துவ-நவகாலனித்துவப் பொருளாதார-அரசியல் நலன்களது பண்பிலிருந்தே தமிழ்த் தேசியவாதத்தின் தோற்றுவாய்,அதன் வளர்ச்சிக்கு-எழிச்சிக்கான உயிர்ப்பலியீடுகளென ஏராளமான தகவல்களைச் சேகரித்த இந்த விமர்சனம், ஒரு நூலுக்கானதெனச் சுட்டப்பட்டபோதும் இதுவே, ஒரு நூலது பண்புக்கு உட்பட்டு விரிகிறதென்பதை நாம் புரிந்துகொள்வோம் நண்பர்களே!

அதிகாரம்-ஆதிக்கம் என்பது ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு "தனிமனிதரை குழுவை-தேசத்தை"யென பணிவுக்குட்படுத்திச் செல்வதில் அதன் கொள்கையளவிலான பண்புகள்"அதிகாரத்தைச் செலுத்துபவரும்,அதிகாரத்துக்குட்படுபவரும் இருவேறு தளத்திலான நம்பிக்கைக்குட்படுகின்றனர்.வர்க்கச் சமுதாயத்துள் ஒருவர் உடமை வர்க்கத்தவராகவும் மற்றவர் உழைப்பாளராகவும் தேர்ந்து போயினர். இதுள்,ஒருவர் ஆதிக்கத்தைச் சட்ட பூர்வமாக்கவும்,நிறுவனப்படுத்தவும் , அதிகாரத்தை நம்ப வைக்கவும்,அது அதிகாரத்துக்குட்படுபவரின் விமோசனத்துக்கானதெனச் சொல்லியே ஆதிக்கத்தை வியாபிக்க முனைகிறார்.ஆதிக்கமானது இத்தகைய தருணத்தில் நம்பகாமாக ஏற்கப்படும்போது மட்டுமே சட்டரீதியான வெளித் தோற்றத்தைச் சமூகத்துள் நிறுவனப்படுத்துகிறது. அதிகாரமும்-ஆதிக்கமும் வெவ்வேறாகிறது.மக்ஸ் வேப்பரது[ Maxs Weber ]நீண்டவுரையாடலைச் [ Wirtschaft und Gesellschaft-Tübingen 1972 ]செழுமைப்படுத்திய  கைன்றிக் போபிற்சு[ Heinrich Popitz] இதைத் தெளிவாகவே நமக்கு[ Das Konzept Macht] உரைத்திருக்கிறார்.உயர் குடிகளுக்கான வாய்ப்பு மிக இலகுவாகவுள்ளதை அவர் புட்டுவைத்தார்.

தமிழ்த் தேசியமானது தனது சக்திகுட்பட்ட அதிகாரத்தைச் செலுத்துவதற்கான நம்பிக்கைகளை மிக இலாவகமக தமிழ்பேசும் மக்களுக்குள் உருவாக்கியது.அஃது, தொடர்ந்து இன்னொரு மக்கட்டொகுதியை ஆத்திரப்படுத்தலுக்கான வழிமுறைகளைக்கொண்டே[Differentiation of Society-Luhmann,M. In Canadian Journal of Sociology 2.] ஒரு இனத்தின்மீதான இன்னொரு இனத்தின் அத்துமீறிய ஆதிக்கத்தை நிலைப்படுத்த விரும்பியது.இதன்சாரத்துள் மறைக்கப்பட்ட நலனானது தமிழ் மேட்டுக்குடியின் நலன்களைச்சார்ந்தே இயங்கிக்கொண்டது.இதன் உச்சபட்சம் மரபார்ந்த அனைத்து அறங்களையும் நாசமாக்கியது.இனங்களுக்கிடையிலான மூலதனவிருத்தி,போட்டிகளை மலினப்படுத்தியபோது அவை முரண்பாடுகளாகவும்-இனம்,மொழி,மதம்,பண்பாட்டுக்கெதிரான தாக்குதற் கருவூலமாகப் புரிய வைக்கப்பட்ட நம்பிக்கைகளே [Symbolic Power.Critique of Anthropology-Bourdiee,Pierre.1979 ]இறுதியில் சட்டபூர்வமான ஆதிக்கத்துக்கான அரசின் உறுப்பாக மாற்றப்படுகிறது.சில மனிதர்களின் நலன்களது தெரிவு எங்ஙனம் ஒரு இனத்தையே மொட்டையடிக்கும் விதேசிய வாதமாக மாறுகிறதென்பதைத் தமிழரசனது இந்த விமர்சனம் குறித்துரைக்கிறது.இது,அதிகாரம்-ஆதிக்கம் குறித்த கைன்றிக் போபிற்சினது(Heinrich Popitz]"சட்டபூர்வமான-தன்மையிலான அங்கீகாரமின்றி ஆதிக்கம் இல்லை"[Ohne Legitimität keine Herrschaft] என்பதோடு நெருக்கமானது நண்பர்களே!

நீண்ட எழுத்துப் பொதிக்குள்-விமர்சனத்துள் ஆழ்ந்து கிடப்பது வரலாற்றாய்வுசார்ந்தவுண்மைகள்.வரலாற்றியக்கத்துள் முழுமொத்த இலங்கை மக்களது சமூகவசைவியக்கம் தோற்றுவித்த முரண்பாடுகள், எந்தச் சாயமுமின்றிப் பேசப்படுகிறது.அது, நாவலனது நூலை மதிப்பீட்டு எல்லைக்குள் புகுத்தாமல் அந்த நூலது பக்கங்கள் தொட்டிருக்கவேண்டிய விடுபடலைச் சுட்டுகிறது.

இவை, ஈழவிடுதலைக்காகச் செய்யபட்ட போராட்டத் திசையில் உள்வாங்கப்பட்ட ஏராளமான போராட்ட முன்னோடிகளிலொருவரான சபா நாவலன் மீதான விமர்சனமில்லை!அவரது ஆய்வு நூலை வரலாற்றோட்டத்தில் வைத்து விளங்க முற்படுகிறது-அவ்வளவே!

கூடவே,அவரால் முன்தள்ளப்பட்ட அரசியல் ஆய்வின் மீதான இணக்க-இணைப்புக்கு மேலதிகமான வரைவாகும்.இந்த வரைவுகளுக்குள் மண்டிக்கிடக்கும் வரலாற்றுத் தகவல்கள் ஒரு ஆவணமாகவே நிலைத்திருக்கிறது.

இது,இலங்கையின் சமூக-அரசியலை மக்கள்-மண்-இயற்கை-சூழலென அனைத்தையும் பிணைத்து உள்வாங்கியவொரு உரையாடலாக நகர்த்தும்போது இலங்கை மக்கள் அனைவருக்குமானவொரு இலங்கையை நமது வழிமுன் நிறுத்துவதில் வெற்றிகண்டிருக்கிறது.

நாம் உழைப்பின் உறவால் ஒன்றுபட்ட மனிதர்கள்.நமக்கு"இனம்-மதம்-மொழி"என்பவைகள் இரண்டாம் பட்சமானவை.இவைக்கும்,உழைப்பவர்களது,ஒடுக்கப்படுபவர்களது,தாழ்த்தப்படுபவர்களது,இந்த அமைப்பால் விளிம்புக்குத் தள்ளப்பட்ட வலுவற்றவர்களது "சுகவாழ்வுக்கும்-விடுதலைக்கும்" எந்தத் தொடர்புமில்லை!

தமிழ்பேசியவர்கள், தமிழர்களை ஒடுக்கவில்லையா?தாழ்த்தவில்லையா?கொன்று இரயர் போட்டெரிக்கவில்லையா?துரோகி சொல்லிப் பொட்டு வைக்கவில்லையா?இவைக்காகத்"தமிழீழம்"என்ற ஒரு புனைவை முன்தள்ளித்தாமே நியாயம் கூறினர்?அந்தத் "தமிழீழம்" இன்றெவரது கைக்குச் செல்வத்தைக் குவித்து வழங்கியிருக்கிறது-எந்தெந்தக் குடும்பங்களது தலைமையில் அதகாரத்துக்கான திசையமைவுகளைக் கொண்டியக்கி வருகிறது? எவரெவரோடு கூட்டுவைத்து இலங்கையிலும்,மேலைத் தேசங்களிலும் இயங்கிக்கொள்கிறது?

இத்தகைய ஏமாற்றை-வரலாறு விட்டுச் சென்ற பக்கங்களைத் தமிழரசன் இயல்பான அறிவாய்வுப்பண்பாடு தமிழ்த் தேசிய மாயையை விலத்திச்சொல்லும்போது உண்மைகளை நாம் தரிசிக்கவிடாத தேசிய வாதத்தைக் குறித்து மீள் மதிப்பீட்டுக்கு வரமுடியும்.

இதுள்,"இனம்-மொழி-மதம்"கடந்து வர்க்க ஒன்றிப்பில் நிகழும் இயக்கப்பாட்டை நோக்குங்கள் இளையோரே!

இந்த விமர்சனமெனும் மேலதிகத் தேடுதல்-வரைவு இன்னும் மூன்று பகுதிகளாக விரியலாம்.

தொடர்ந்து ஊக்கத்தோடு வாசியுங்கள்!,

நமக்கான உண்மையைக் கண்டடையக் கல்-முள் கொட்டப்பட்டிருக்கும் இந்த வரலாற்றுவுண்மைசார்ந்த ஆய்வுப் பாதைக்குள் நடந்தே தீரவேண்டும்.

நமக்கு இதைவிட வேறு குறுக்குப் பாதையில்லை!

தொடர்வோம் அன்பர்களே.

நிறைந்த நேசத்தோடு,
ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி.
30.07.2012


சபா  நாவலன் சொல்லும் தேசிய இனப்பிரச்னையில்...( 2)


‘ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி 1960 இல் தமிழரசுக் கட்சியுடன் உடன்பாடு செய்து ஏமாற்றியது என நாவலன் எழுதியுள்ளார்.


இங்கு இவர் தருவது ஒரு பிழையான விபரணையாகும். ‘பண்டா- செல்வா ஒப்பந்தத்தின் பின்பு எந்த ஒரு உடன்பாடும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் தமிழரசுக்கட்சிக்கும் ஏற்படவில்லை. தமிழரசுக்கட்சி, தமிழ்க்காங்கிரஸ் இரண்டும் அப்போதும் சரி பின்பும் சரி  UNP உடன்தான் கூடித்திரிந்தன. மந்திரிப் பதவிகள் ஏற்றன. 1960 இல் இரண்டு முறை தேர்தல் நடந்தது; முதல் நடந்த தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு அரசாங்கத்தை அமைக்குமளவு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இடதுசாரிக் கட்சிகள் வெளியில் இருந்து ஸ்ரீலங்காசுதந்திரக் கட்சிக்கு ஆதரவளிக்கத் தயாராக இருந்தனர். எனவே, தமிழரசுக்கட்சியை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சந்தித்து அம்பத்தெட்டு சேர் போட்டு செல்வநாயகத்திடம் அரசமைக்க ஆதரவு தரும்படி கேட்டது. முதலில்  "ஓம் !" என்று சொல்லி விட்டு பின்பு, செல்வநாயகம் மறுத்துவிட்டார்.

இங்கு, தமிழரசு- யு.என்.பி யின் இரகசியக் கூட்டுக்கள் மட்டுமல்ல இவர்கள் பின்பு இருந்த பிரிட்டிஸ் அரசின் இலங்கைத் தூதரே இவர்களைக் கட்டுப்படுத்தினார். பிரிட்டிஸ் தூதுவராலயம் வெளிப்படையாகவே யுஎன்பி ஆதரவு காட்டியதுடன் எப்பாடுபட்டேனும் இடதுசாரிகள் உதவியுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசு பதவிக்கு வருவதைத் தடுக்க முயன்றது. 1960 இல் இரண்டாவது முறை தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வெற்றி பெற்றது. அரசமைத்தவுடன் செல்வநாயகம் அரசுக்கு எதிரான எதிர்ப்பு இயக்கத்தைத் தொடங்கினார். 1961இல் சத்தியாக்கிரகம் தொடங்கியது, முத்திரை அடித்து விற்கப்பட்டது. இங்கு யு.என்.பி யுடன் [ The United National Party]சேர்ந்து கொண்டு பிரிட்டிஸ் தூதரக அரசியலுக்குத் தான் தமிழரசுக்கட்சி ஆடியது. இதைத்தமிழ் மக்களுக்கான அரசியல் என்று நாவலன் நிரூபிக்கப் பார்க்கின்றார்.


‘1915 இல் இலங்கையில் முதலாவது இனக்கலவரம் நடந்தது என்று தொடங்கும் நாவலன் எழுத்து ‘ஆங்கிலேயருக்கு சேவை செய்த நிலப்பிரபுக்கள் கலவரத்துக்கு செயல்வடிவம் கொடுத்தனர். மத்தியதர வர்க்கமும் தொழிலாளர்களும் இதில் ஈடுபட்டனர்’ என்று வளர்த்துச் செல்கிறார்.

1915 இல் முஸ்லிம் மக்கள் மேலான தாக்குதலை சிங்கள இனவாதத்தின் விளைவாகக் காட்டுவதென்பது வழக்கமான தமிழ்த்தேசியவாதக் கருத்துருவமாகும்.

நாம் இதன் மூலகாரணிகளை அக்கால அரசியல் மற்றும் சமூக நிலைமைகளில் தேடிப்பார்க்க வேண்டும். 1914 இல் முதலாம் உலக யுத்தம் தொடங்கி ஏற்றுமதி, இறக்குமதிகள் தடைப்பட்டு உணவுப்பொருட்களும் ,அத்தியாவசியப் பொருட்களும் விலை ஏறின. பிரிட்டிஸ் அரசு புதிய வரிகளை விதித்து யுத்தத்துக்குப் பணம் திரட்டியது.பிரிட்டிஸ் அரசு வெளிநாடுகளில் செய்யும் போருக்கு இலங்கை மக்கள் தண்டப் பணம் கட்ட வேண்டியிருந்தது. மக்களிடையே பசியும்- பட்டினியும் ,வேலையின்மையும் பிரிட்டிஸ் அரசு மீது கோபமும் வளர்ந்து வந்தது. இச் சமயத்திலேயே பிரிட்டிஸ் நபரான டி.எஸ்.சேனநாயக்கா போன்ற சிங்கள இனவாதிகள் பிரிட்டனுக்கு ஆதாரவாக முரண்பாட்டைத்  திருப்பி ஒரு இனத்தின் மீது அதைக் குவித்தனர்.உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு விலையேற்றம் இவைகளுக்கு முஸ்லிம் வியாபாரிகளே காரணம் எனக் கூறினர்.

இக்கலவரம் உண்மையில் யுத்த நிலைமைகளில் ஏற்பட்ட உணவுக்கான கலவரமாகும். இத்தகைய உணவுக்கலவரங்கள் இந்தியா உட்பட முழு ஆசிய நாடுகளிலும் ஏற்பட்டன. ஐரோப்பிய நாடுகளில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தங்களிலும் கலகங்களிலும் ஈடுபட்டார்கள். ஆகவே, உலக யுத்தம் ஏற்படுத்திய பொருளாதார நிகழ்வுப் போக்கு இலங்கையுள் முஸ்லிம் மக்களுக்கு எதிரான நடவடிக்கையால் பதிலீடு செய்யப்பட்டது. பிரிட்டிஸ் ஆட்சியினர் ,இலங்கை சுதேசிய மக்களின் அரசியல் வளர்ச்சியற்ற நிலைமைகளை தமக்குச் சாதகமாககப் பயன்படுத்தினர். இலங்கை மக்களிடையேயான பிணக்குகளாக ஆக்கினர்.இதையே முஸ்லிம் சிங்களக் கலவரமாக நாவலனும் பார்க்கின்றார்.


யுத்தத்தினால் சமூகத்தின் சகல தட்டுக்களும் பாதிக்கப்பட்டு இருந்த போதும் ஏழைகள், சமூகவிரோதிகள், உதிரித்தொழிலாளர்கள் கலவரங்களில் பங்கெடுத்தனர். இதைப் பட்டினிக் கலவரங்களாகவே கொள்ளவேண்டும். இதை நாவலன் வெறும் சிங்கள இனவாத நடவடிக்கையாகப் பார்த்தமையின் மூலம் இந்தக் கலகத்தின் அரசியல், சமூக, பொருளியல் உள்ளடக்கத்தை தவறவிட்டார். ஆங்கிலேயருக்கு சேவை செய்த நிலப்பிரபுக்கள் ,கலவரத்துக்கு செயல்வடிவம் கொடுத்தனர் என்று எழுதிய போதும் இக்கலவரம் பெரிதாக நடைபெறவில்லை. கம்பளையில் முஸ்லிம்களின் மசூதி முன்பு பௌத்தர்களின் மத ஊர்வலம் வழக்கத்துக்கு மாறாக இசைக்கருவிகளை ஒலித்தமையே கலவரம் தொடங்க உடனடிக் காரணமாக இருந்தது. கைது செய்யப்பட்ட டி.எஸ்.சேனநாயக்காவுக்காக வாதாட பொன்னம்பலம் இராமநாதன் பிரிட்டன் சென்று குடியேற்ற நாட்டுக் காரியதரிசியைச்  சந்தித்தார். அவர் அதற்கான ஆவணங்களை தனது பாதணியில் மறைத்து எடுத்துச் சென்றார் என்று தமிழ்த்தேசியவாதிகள் மேடைகளில் பேசியதுண்டு. அக்காலத்தே தமிழ் உயர்வர்க்கங்கள் முஸ்லிம்கட்கு எதிராக சிங்கள தேசியவாதிகளை ஆதரித்தன என்பதை நாவலன் காட்டாது விட்டு விட்டார்.

இதையே தான் தமிழ் உயர்வர்க்க சக்திகள் மலையக மக்களுக்கும் செய்தார்கள். செய்திகள் ஆவணங்களை அப்படியே பயன்படுத்துவதை விட்டு அதை மாக்சிய ஆய்வுமுறைக்குட்படுத்தவேண்டும் என்று நாவலன் எண்ணவில்லை.


"தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியிலிருந்து உருவான அமிர்தலிங் கத்தினது  தலைமையின்போது நிலப்பிரபுத்துவக் கூறுகளும் ,அந்நிய மூலதனத்துக்கு எதிரான கூறுகளும் இருந்தது. நிலப்பிரபுத்துவ தரகு முதலாளிய வர்க்க சார்புகளும் கொண்டிருந்தது என நாவலனின் தத்துவ ஆய்வு கண்டறிந்து சொல்கிறது.

முதலில் ,நாவலன் யாழ்குடாநாட்டுள் நிலப்பிரபுத்துவத்தைத் தேடுவதை நிறுத்தவேண்டும். அங்கு, சிறுநிலவுடமை வர்க்கமே இருந்தது என்பதுடன் பெரிய விவசாயப் பொருளாதாரத்துக்கு ஏற்ற நிலப்பரப்போ, உற்பத்தியோ விவசாயத் தொழிலாளர்களோ அங்கு இருக்கவில்லை.யாழ்.குடாநாட்டின் விவசாயப் பொருளாதார உற்பத்தியானது தனது சொந்த தேவையைக் கூடப் பூர்த்தி செய்ய முடியாதளவு சிறியதாகும்.


யாழ்குடாநாட்டுள் புகையிலை,வெங்காயம்,மிளகாய் என்பன பணப்பயிர்களாக பயிரிடப்பட்ட போதும் இது பொருளாதார ரீதியாகப் பெரும் பாத்திரத்தை வகிக்கவில்லை. இது யாழ் குடாநாட்டின் ஒரு சில பரப்புக்களில் கடும் உழைப்பில் முறியும் சிறு விவசாயிகளின் ,குத்தகை விவசாயிகளின் சிறு பொருளாதார நடவடிக்கையாகவே இருந்தது.சிறு நிலவுடமை வடிவமாக பரப்புக்கணக்கான சிறுசிறு நிலத்துண்டுகளில் உழைத்தமையால் கடும் சுரண்டலும் ,"சோத்துக்கையால் காகம் கலையாத" நப்பித்தனமும் நிலவியது. நிலமின்மையும் காணிச் சண்டையும் குடாநாட்டின் பண்பாக இருந்தது.

வன்னியில் நிலப்பிரபுக்கள் இருக்கவில்லை. நிலத்தை சொந்தமாகக் கொண்டாட சுதந்திர விவசாயிகள் இருந்தனர். கிழக்கில் மட்டுமே போடியார்கள் எனப்படும் நிலத்தை அதிகமாய்க் கொண்ட பெரிய விவசாயிகள் இருந்தனர். யாழ்.குடாநாட்டினைப் போல் வன்னியிலும் ,கிழக்கிலும் குத்தகை விவசாயிகள் இருக்கவில்லை. ஆனால் ,தமிழ்தேசியவாத அரசியல் சக்திகள் அது சார்ந்த தலைமை என்பன வன்னியிலோ, கிழக்கிலோ இருந்து தோன்றவில்லை.மாறாக ,யாழ்.குடாநாட்டின் அரச சேவையால் ,ஆங்கிலக் கல்வியால் உருவான சக்திகளிடமிருந்தே தோன்றியது.தமிழ்தேசியவாத அரசியல் என்பது யாழ்.நடுத்தரவர்க்கத்தின் படையலாகும்.அங்குள்ள சிறு நிலவுடமை அமைப்புக்கு தமிழ்த்தேசியத்தை கொண்டியங்கும் நடுத்தர வர்க்கத்தை மிஞ்சிய பலம் இருக்கவில்லை.

ஆக, அமிர்தலிங்கம் நிலப்பிரபுத்துவ,தரகுமுதலாளிய நலன்களைப் பிரதிபலித்தார் என்பது பொருத்தமற்றது. அவர் திட்டவட்டமான தமிழ் நடுத்தரவர்க்க கல்வியாளர்களின் பிரதிநிதிகளாகும்.யாழ்ப்பாணத்திலோ ஏனைய தமிழ்ப் பகுதிகளிலோ தமிழ் முதலாளியச் சக்திகள் அல்லது தரகு முதலாளியச் சக்திகளை வளர்ந்து இருக்கவில்லை. பெரும் வர்த்தக நிலையங்களோ ,தொழிற்சாலைகளோ தமிழ்ப்பகுதிகளில் இல்லை .தமிழ் வர்த்தகர்கள் கொழும்பில் வர்த்தகத் துறையிலேயே பெரும் பகுதியாக இருந்தனர். அவர்கள் தென்னிலங்கையில் உள்ள யு.என்.பி , ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி போன்ற தேசியக்கட்சிகளையே ஆதரித்தனர்.

இவர்களில் எவரும் தமிழரசுக்கட்சியை ஆதரிக்கவில்லை.

பதவிக்கு மாறி வரும் எல்லாக் கட்சிகளையும் ஆதரித்தனர். அமிர்தலிங்கம் அந்நிய மூலதனத்தை எதிர்த்ததாய் நாவலன் எழுதியுள்ளார்.அமிர்தலிங்கம் ஏனைய தமிழ்த்தேசியவாதிகளைப் போல் சட்டத்தரணி, பொருளாதார அறிவு படைத்திராதவர் !அந்நிய மூலதனத்தை எதிர்த்த இடதுசாரிகளையே எதிர்த்தனர். பிரிட்டிஸ் ஜனநாயகத்தை நம்பியவர் ,சிங்களவர் ஆட்சியை விட பிரிட்டிஸ் ஆட்சி சிறந்தது, கூடியளவு ஜனநாயகமானது என்று கருதியவர் அமிர்தலிங்கம்.இலங்கை குடியரசானதை எதிர்த்தவர்.திருமலைத் துறைமுகத்தை தமிழர் பிரச்னையைத் தீர்க்காமல் இலங்கையிடம் ஒப்படைக்கக்கூடாது என்று பிரிட்டிஸ் மகாராணிக்கு தந்தி அடித்த செல்வநாயகத்தின் கட்சிக்காறர், சின்னஞ் சிறு இஸ்ரேல் 20 க்கும் மேற்பட்ட அரபு நாடுகளை அடக்கி ஆள்வதாக தமிழ் மக்களுக்கு மேடைகளில் அரசியல் பாடமெடுத்த மேற்குலக கருத்தியல் ஆதரவாளர் !

அந்நிய ஆட்சியை ,அந்நிய மூலதனத்தை எதிர்த்தவர்கள் இலங்கை இடதுசாரிகள் !;முக்கியமாக எல்.எஸ்.எஸ்.பி [The Lanka Sama Samaja Party ]யும் இலங்கைத் தொழிலாளர்களுமே தவிர அமிர்தலிங்கம் அல்ல, வலதுசாரியான அமிர்தலிங்கம் எப்படி அந்நிய மூலதனத்தை எதிர்ப்பார். இலங்கையில் அந்நிய சொத்துக்களை தேசிய உடமையாக்குவதை எதிர்த்த கட்சியல்லவா தமிழரசுக்கட்சி!.நிலச்சீர்திருத்தம் முதல் லேக் ஹவுஸ் 'ஐ தேசிய மயமாக்கல் வரை அமிர்தலிங்கம் எதிர்த்த ஆள் !!;இப்படியானவர் எப்படி நாவலனுக்கு அந்நிய மூலதனத்தை எதிர்த்தவரானார். அந்நிய மூலதன எதிர்ப்பு என்றால் ஏகாதிபத்திய எதிர்ப்பு என்றல்லவா பொருள்.அமிர்தலிங்கம் எந்தக் காலத்தில் ஏகாதிபத்திய எதிர்ப்பாளன்?அவர் பிரிட்டிஸ் தூதரகத்தில் விருந்து சாப்பிட்டுப் பழகியவரல்லவா?.


அமிர்தலிங்கத்தின் தமிழரசு வாலிபர் முன்னணி என்பது ஒருபெரும் சேனையல்ல பத்து இருபது பேர் கொண்ட சிறு குழுவாகும்.அதற்குத் தொழில் தமிழரசுக்கட்சிக்கு தேர்தல் காலத்தில் மேடை போட்டு,தோரணம் கட்டித்தூக்குவதாகும்.அமிர்தலிங்கம் தனது பல்கலைக்கழக படிப்புக் காலத்திலேயே இலங்கை- இந்தியா தமிழ்நாடுகளை இணைந்த பெரிய தமிழ்நாடு என்ற இலட்சியத்தைப் பிரச்சாரம் செய்தவர். இது தமிழ்நாட்டின் திராவிட நாடு மற்றும் ம.பொ.சி.,ஆதித்தனார் ஆகியோரின் பிரிவினைவாதக் கருத்துக்களுடன் தொடர்புடையதாகும். இவை யாவும் பிரிட்டிஸ் பிரிவினைவாதக் கருத்துக்களின் விளைச்சலே என்பதைச் சொல்லவேண்டியதில்லை. அமிர்தலிங்கத்திடம் திராவிடர் ,ஆரியர் நோயின் கூறுகள் ஏராளமாக இருந்தன. இலங்கை இடதுசாரி இயக்கங்களை தமிழ், சிங்கள, முஸ்லிம் உழைப்பாளர்கள் ஒன்றிணைந்த தொழிலாளர் எழுச்சியை, நாசமறுத்த அமிர்தலிங்கம் போன்றவர்கள் நாவலனுக்கு அந்நிய மூலதன எதிர்ப்பாளர்களாய் தோன்றுகிறார்கள். இதுவா மாக்சியப் பார்வை?

‘சிங்களப் பேரினவாத நிலப்பிரபுத்துவ தரகு முதலாளித்துவம்’ என்ற அரசியல் வரையறை நாவலனால் அடிக்கடி எழுதப்படுகின்றது. இதன் மூலம் தமிழ்,சிங்கள முரண்பாட்டின் ஏகாதிபத்தியத் தாக்கம் வலுக்குறைக்கப்பட்டு விடுகின்றது. "சிங்களப் பேரினவாதம் ,நிலப்பிரபுத்துவ தரகு முதலாளியம் ", போன்ற கருத்தியல்களை நாம் ஆராயவேண்டும்.

1880 இல் இலங்கையில் இருந்த பிரதான பெருந்தோட்டப் பயிர்ச் செய்கையான கோப்பியில் [The expansion of Sri Lankan coffee plantations ] 90 வீதம் பிரிட்டிஸ்காரரிடமே இருந்தது. மிகுதி 10வீதத்தில் பெரும்பகுதி இந்திய தோட்ட உடமையாளர்களாக இருந்தபோது, மிகச் சிறு பிரிவு பெரும் தோட்டமே சிங்கள, தமிழ் நிலவுடமையாளர்களிடம் இருந்தது. 1917 இல் 300க்கு மேற்பட்ட இலங்கையில் இருந்த தேயிலைத் தோட்டங்களில் 29 மட்டுமே இலங்கையருக்குச் சொந்தமாக இருந்தது. அதாவது ,500,000 ஏக்கருக்கு மேற்பட்ட தேயிலைத் தோட்டங்களில் 2வீதம் மட்டுமே இலங்கையரிடமிருந்து!.

1934 இல் இலங்கையின் முழு இறப்பர் தோட்டங்களில் 77வீத பிரிட்டிஸ்காரர்களிடம் இருந்தது. ஆக ,முக்கிய ஏற்றுமதிப் பண்டங்களான தேயிலை, இறப்பர், கோப்பி என்பன இலங்கையரிடம் இருக்கவில்லை என்பதுடன் ,முக்கிய ஏற்றுமதிப் பண்டமல்லாத தெங்குப்பொருள் உற்பத்தி மற்றும் இரத்தினக்கல் தோண்டுதல் என்பனவே இலங்கையரிடமிருந்தது. எனினும் ,பெருந்தோட்ட உற்பத்திப் பொருள் சுரங்கத் தொழில் ஏற்றுமதி வர்த்தகம்,முகவர்கள்,கப்பல்சேவை, காப்புறுதி வங்கி யாவும் பிரிட்ஸ்காரர்களிடமே இருந்தது. எனவே, சிங்கள மக்கள் மத்தியில் பெரிய நிலப்பிரபுத்துவ அமைப்பு நிலவியது என்ற நாவலனின் கருத்து தவறானது.

 இலங்கை முழுவதும் ‘சிறு நிலவுடமைச் சமூகமே’ இருந்தது.சுதந்திரமடைந்த பின்பு 1951இல் கூட 70வீத தேயிலைத் தோட்டங்கள், 40வீத இறப்பர் தோட்டங்கள்,10வீத தென்னந்தோட்டங்கள் பிரிட்டிஸ்காரரிடமே இருந்தது. வெளிநாட்டு வர்த்தகத்தில் 90வீதம் அவர்கள் கட்டுப்படுத்தினார்கள். 9 வங்கிகளில் ஒரு வங்கி மட்டுமே இலங்கையரிடமிருந்தது. காப்புறுதிச் சொத்தாகிய 83 மில்லியன் ரூபாயில் 73.7மில்லியன் ரூபாய் அந்நிய நிறுவனங்களிடமிருந்தது. சாராயம், கட்டிடத் தொழில் உணவுப் பொருள் தயாரிப்பு என்பனவே இலங்கையரிடம் இருந்தது.




எனவே, முதலாளித்துவ உருவாக்கத்துக்குத் தேவையான பரந்த நிலப் பிரபுத்துவ முறையிலான பொருளாதாரம் இருக்கவில்லை. 1952 இல் உலக வங்கி இரண்டாம் உலக யுத்த காலத்தில் ஐரோப்பாவில் உற்பத்தி செய்ய முடியாத காரணத்தால் இலங்கையுள் வளர்ந்த சிறு தொழிற்சாலைகளையும் மூடப்பண்ணியது.எனவே உள்நாட்டு சிறு நில உடமையாளர்கள், இடைத்தரகர்கள், உயர்குடும்பங்கள், வர்த்தகர்கள், நிலம் மீது அக்கறை கொண்டவர்கள், அரச சேவையாளர்கள், நடுத்தரவர்க்கம் என்பன பிரிட்டனில் தங்கி வாழும் கட்டாயம் இருந்தது. இவர்கள் பிரிட்டனை எதிர்க்கும் பொருளாதாரச் சக்தி படைத்தவர்களல்ல.

1947இல் யு.என்.பி இவர்களின் கட்சியாகப் பிறந்தது. பிரிட்டிஸ் சார்பு இடதுசாரி எதிர்ப்பு அரசியலையும் நடாத்தியது.[The UNP was founded on 6 September 1946 by amalgamating three right-leaning pro-dominion parties from the majority Sinhalese community and minority Tamil and Muslim communities. It was founded by Don Stephen Senanayake, who was in the forefront in the struggle for independence from the United Kingdom, having resigned from the Ceylon National Congress because he disagreed with its revised aim of 'the achieving of freedom' from the British Empire. The UNP represented the business community and the landed gentry. However, Senanayake also adopted populist policies that made the party accepted in the grassroots level.The UNP campaigned in the 1947 general election on a platform of dominion under the United Kingdom and protecting the traditional way of life and Buddhism, the religion followed by the majority of the people, from alleged communist threats from the left-wing opposition parties (the Lanka Sama Samaja Party and the Communist Party of Ceylon). The UNP failed to win a working majority and cobbled together a coalition with Sinhalese and Tamil elements. Ceylon became a dominion in 1948, with D.S. Senanayake as the first prime minister. He followed a pro-West, anti-Communist foreign policy much to the ire of the Soviet Union. The commanders of the armed forces were all British officers and Britain retained military bases in the country.- http://en.wikipedia.org/wiki/United_National_Party  ] பிரிட்டிஸ் இராஜதந்திர முதிர்ச்சியின் முன்பு இவர்கள் அரசியல் தமிழ், முஸ்லிம் விரோதத்தை உடைமைகளாய்க் கொண்டன. 1950 கட்கு முன்பு இலங்கை அரசியலில் சிங்கள், தமிழ், இனவாத அரசியல் இருக்கவில்லை என்று நாம் சுலபமாக நிறுவிவிடலாம். தொழிற்துறை வளர்ச்சியை யு.என்.பி தடை செய்தது என்பது நாவலனின் மற்றொரு வாதம்.உண்மையில் அதற்கான பொருளாதாரபலமற்ற வர்க்கமாக இருந்தது. அது தொழில்துறையை படைக்க வல்ல மூலதன பலத்தை பெற்றிராத தரகுச் சக்திகளாக இருந்தது.இது யுஎன்பிக்கு மட்டுமல்ல மூன்றாம் உலக நாடுகளும் அன்றைய கால கட்டத்தினது நிலைமையாக இருந்தது.

இவர்கள் சுயமாக செயற்படமுடியாத ஏகாதிபத்தியத்தை சார்ந்து நின்ற சுய அடையாளம் பேணமுடியாத அரசியலைச் செய்தன. 1956இல் பண்டாரநாயக்கா, மற்றும் பிலிப் குணவர்த்தனா அரசு தான் தனியார் முதலாளித்துவம் வளர்ந்திராத இலங்கையில் ,சுயசார்ப்புப் பொருளாதாரத்தை அரசு வகைப்பட்ட முதலாளித்துவத்தைக் கட்ட முயன்றனர். இந்த சுயசார்பு அரசியல் பொருளாதாரத்தை நிறுத்தவே பண்டாரநாயக்கா கொலை நிகழ்த்தப்பட்டு தீவிர தமிழ், சிங்கள விரோத நிலையை ஏகாதிபத்தியங்கள் கொண்டு வந்தன. யு.என்.பி யின் டி.எஸ்.சேனநாயக்காவை, டட்லியை வெறுக்காத தமிழ் தேசியவாதிகள் பண்டாரநாயக்காவை வெறுத்தமையின் அரசியல் உள்ளுடன் இது தான்.


"1950 தொடக்கம் 1980 கள் வரை நிலவிய சிங்கள இனவாதம் "இன்றும் " நிலவுவதாக, நாவலன் வார்த்தைகளை அணிதிரட்டுகின்றார். "

இன்றுள்ள சிங்கள், முதலாளிய சக்திகள் -"பல பத்து வருடங்கள் "- முன்பிருந்த சிறிய பொருளாதார பலத்தைக் கூட உலக மயமாதலில் இழந்துவிட்டு நிற்கின்றன. உள்ளுரில் தமிழ், சிங்கள,முஸ்லிம் முதலாளித்துவ சக்திகளிடையே பொருளாதாரம் இன்று ,இலங்கையில் இல்லை.முழுமையான ஆசிய மயப்படலுக்கு உள்ளாகியுள்ள நாட்டில் ,தம்முள் முரண்ட பொருளாதாரத் தேவைகள் இல்லை. இவர்கள் ஒன்றிணைந்து உலக மயமாதலின் பொருளாதாரப் பயன்பாட்டில் பங்கு பெற முயல்கின்றனர். மறுபடி, ஆங்கில மொழியின் முக்கியத்துவம் வளர்வதும் ,எதிர்காலத்தில் சீன, ஹிந்தி மொழிகளின் தேவைகள் கூட இலங்கையுள் ஏற்படவுள்ள காலத்தில் தமிழ்,சிங்களச் சண்டைகள் பயன்படமாட்டா ஆக,இலங்கையில் இன்று நிலவுவது முதலாளிய வகைப்பட்ட இலங்கைத் தேசியமாகும்-இலங்கையர் என்ற உணர்வுக்கான போராட்டமாகும்.

சிங்கள மக்களை பெரும்பான்மையாய்க் கொண்ட காரணத்தால் அது, சிங்கள தேசியவாதச்  சாயலை கொண்டிருப்பது இயல்பானதாகும். சிங்கள இனவாதமும் ,இலங்கை தழுவிய தேசபக்த உணர்வு அல்லது தேசியம் இரண்டும் ஒன்றல்ல.

உலக மயமாக்கலுக்கு முந்திய இன முரண்பாடுகள் உலக மயமாதலின் பின்பு எப்படி மாறும் என்ற கேள்வி நாவலனிடம் இல்லை. சமூகம் மாறாத்தன்மை வாய்ந்ததா?அசைவியக்கமற்றதா?


ஏகாதிபத்திய இராணுவப் பாசிசக் கூலிப்படையான புலிகள் தமிழ்,சிங்கள முரண்பாடுகளை உயிருடன் வைத்திருக்க இடைவிடாது போராடி வந்தனர். தமிழ்த்தேசம், சிங்களதேசம், சிங்களப் பேரினவாதம் என்ற சொற்றொடர்களை உருவாக்கி வழக்கில் கொண்டு வந்தனர். இங்கு நாவலனிடம் நிலவும் சிங்களப் பேரினவாதம் என்ற எழுத்து அணி நடை, தமிழினவாதத்தின் சொல்லாடலே !.

இலங்கை தழுவிய தேசியப் போக்கை உருவாக்கவும் ,ஆசிய மயமாதலில் இரண்டறக் கலக்கவும் இலங்கை நிர்ப்பந்திக்கப்படுகின்றது. இந்தியா முதல் சீனா வரை பிளவுபடாத இன,மத, முரண்பாடுகள் இல்லாத ஆசியாவை உருவாக்க முயலும் காலமிது. அது ,அவர்களது பொருளாதார வளர்ச்சிக்கு உட்பட்ட ஒன்றாகும். ஆசியா பிளவுபட்ட காலம் போய் ,ஒன்றிணையும் காலமாகும். பெரும்பான்மை இனமென்றால் அது எப்போதும் ஒடுக்கும் இனமாக இருப்பதில்லை. இனமுரண்பாடுகளைத் தோற்றுவித்த புற மற்றும் அக நிபந்தனைகள் மாறும்போது இனமுரண்பாடுகள் மாறாமல் விடாது.

 யூகோஸ்லாவியாவின் பெரும்பான்மை இனமான சேர்பியர்கள் சிறு தேசிய இனங்களான குரோட்டிய, பொஸ்னிய, கொசவோ , அல்பானியர்களால் சிதறடிக்கப்படுவதை நாம் பார்த்தோம். இன்றைய ஈராக்கிய மக்களை ஒரு அமெரிக்கக் கூலியான சிறுபான்மையின குர்திஸ் அரசியல்வாதி ஆளவில்லையா?


இலங்கையின் மொத்த சனத்தொகையில் சிங்கள, முஸ்லிம்,மலையக மக்களை அடுத்து நாலாவது இடத்தை கிட்டத்தட்ட 3.9 வீதம் வகிக்கும் தமிழர்களின் தேசிய விடுதலை என்ற பெயரிலான புலிப்பாசிசம் முழு இலங்கை மக்களுக்கும் மேலான பயங்கரவாதமாகிவிட்டது. அது உலகு தழுவிய பிரச்சாரம், பொருளாதாரம், அமைப்பு வடிவம் ஆகியவற்றைக் கொண்டு ஆசியாவையே பயமூட்ட முயல்கின்றது. இந்தியத் துணைக்கண்டத்தில் எந்த அரசியல் தலைவரையும் கொல்லும் பலம் பெற்றுள்ளது. தமிழர்களை மட்டுமல்ல சிங்கள,முஸ்லிம் மக்களையும் ,தென்னிலங்கையின் பாதாள உலகக் கோஷ்டீகளையும் ,இலங்கை இராணுவம்,பொலிஸ் உளவுத்துறைகளையும் விலைக்கு வாங்குகின்றது. கனடா, அமெரிக்கா வரை தேர்தலில் நிதி தருமளவு அதற்கு தொடர்பும் ,உறவும் உள்ளது.


தமிழ் சிங்கள முரண்பாடானது வரலாற்று ரீதியிலான பகைமையுடையதல்ல என்று நிறுவ நேர்மையாக முயற்சித்த நாவலன் ,இரு இனங்கட்கும் மதம் சார்ந்த முரண்பாடுகள் நிலவின என்பதான நிரூபணங்கட்கு எம்மை இட்டுச் செல்கிறார்.

 6ம் நூற்றாண்டில் எழுந்த மகாவம்சம் தான் சிங்கள அடிப்படைவாதக் கருத்துக்களைப் புகுத்தியதாகவும் ,விகாரைகளை மையமாய்க் கொண்ட பிற்கால சிங்கள இனவாதமாகவும் அவர் வரலாற்றை தமிழ்த் தேசியவாதத்தின் விருப்புக்கேற்ப வழி நடத்திச் செல்கிறார்.

முதலில் இது ,அவரது சொந்த வாதங்களை மறுப்பதில் தொடங்குகின்றது.

 தேசிய உருவாக்கம் என்பது தேசியப் பொருளாதாரம், சந்தைப் பொருளாதார அபிவிருத்தியுடன் சம்பந்தப்பட்டது எனக் கூறி வந்தவர், பிரிட்டிஸ் ஆட்சியில் Madame Bluvatsky போன்றவர்களின் காலத்தை பௌத்த சிங்கள போக்குகளின் தொடக்கம் என்றவர். இப்போ சிங்கள இனவாதத்தின் மூலம் 6ம் நூற்றாண்டில் மகாவம்ச காலத்துக்குரியது என்கிறார்.

பௌத்தம் ,பாலி மற்றும் சமஸ்கிருதம் போன்ற மொழிகளின் செல்வாக்குக்கு உட்பட்டிருந்த காலத்தை சிங்கள மொழி தோன்றிக் கொண்டிருந்த காலத்தை அன்றைய சமுதாய உற்பத்தி உறவுகளிலும் இலங்கையை சூழ நிலவிய ஆக்கிரமிப்புச் சூழலிலும் நாவலன் காண முயலவில்லை. சிங்கள இன உருவாக்கத்தை வரலாற்று ரீதியாகவும் ,தொடர்ச்சி விட்டுப் போகாமலும் அவரால் விளக்க முடியவில்லை. மாறாக, ஒன்றை-ஒன்று மறுக்கக்கூடிய நிகழ்வுகளாக எமது பார்வைக்கு விட்டுச் செல்கிறார். என்ன தான் இனவாதம் கடந்தவராகத்  தன்னை நாவலன் காட்ட இடையறாது பிரயத்தனம் செய்தபோதும், சிங்கள இன உணர்வு தமிழர்கட்கு எதிரானது என்ற அவரது ஆழமான மனப்பதிவானது சிங்கள இன உருவாக்கத்தை பௌத்த மதத்துடன் கூடிய குற்றத்தன்மை கொண்டதாக விபரிக்கப் பார்க்கின்றார்.

சிங்கள அரசுகள் ,இலங்கையின் தென்பகுதியை நோக்கி நகர்ந்தமை இடைவிடாத இந்தியப்படையெடுப்புக்களே என்பதை அவர் குறித்துள்ளபோதும் மகாவம்சத்தை பௌத்த சிங்களப் பேரினவாதப் போக்கின் தொடக்கம் என்று இட்டுக்கட்டப் பின் நிற்கவில்லை.


மகாவம்சம் தோன்றிய காலத்திய இலங்கை,இந்திய நிலைமைகளை நாம் ஆராய்ந்தோமாயின் வர்ணச்சிர மதம் பௌத்தத்தை அழிக்கத் தொடங்கியிருந்தது. தமிழ்நாட்டில் சைவ சமயம் தீவிரமாக வளரத் தொடங்கியது.சைவம் பரப்பும் நாயன்மார்கள் தோன்றி சிவனின் பெருமை கொண்டாடியபோது வைணவ ஆழ்வார்கள் திருமாலைப் போற்றத் தொடங்கினர்.அந்தணர்,சூத்திரர்,பெண்கள், சாதிகள், கடந்து இந்த மதம்கள் அனைவரையும் ஆட்கொள்ள முயல்வதாகத் தோற்றம் காட்டின.

6ம் ,7ம் நூற்றாண்டு காலப்பகுதி முழுவதும் பௌத்தத்துக்கு எதிராக அனல்வாதம், புனல்வாதம் ஆகிய தர்க்க முறைகள் தோன்றின.

ஆயிரக்கணக்கான பௌத்த விகாரைகளையும் ,பௌத்த மடம்களையும் , சைவர்களும் வைணவர்களும் கைப்பற்றினார்கள்-அழித்தார்கள்.

தமது கோவில்களாக ஆக்கினார்கள். இலட்சக்கணக்கான பௌத்த துறவிகள் கொலை செய்யப்பட்டனர். பௌத்தத் தமிழ்நூல்கள் ஒன்றும் விடாமல் அழிக்கப்பட்டன, தீயிடப்பட்டன. ஆற்றில் இடப்பட்டன.

நாவுக்கரசரின் "நாமார்க்கும் குடியல்லோம் நமனையஞ்சோம் " என்ற குரல் அரசனை மட்டும் எதிர்த்ததல்ல பௌத்தத்தையும் எதிர்த்தே பிறந்ததாகும்.

நாயன்மார்கள் பௌத்த துறவிகள் போன்று எளிமையான கோலம் பூண்டனர். மக்களிடம் சென்றனர்.அவர்கள் தருவதை உண்டனர் என்பன பௌத்த மதத்தை வெல்லக் கண்ட உபாயமே.களப்பிரர் ஆட்சிக்காலம் என்பது தமிழ்நாட்டில் பௌத்தம் செழித்த காலம். இது இருண்டகாலம் என்று வர்ணிக்கப்படுவதேன்?இக்காலத்திய பௌத்த நூல்கள், பௌத்த இலக்கியங்கள் அழிக்கப்பட்டு அது, வரலாறு- அடையாளம் காணமுடியாத இருண்ட காலமாக ஆக்கப்பட்டது. கி.பி. 5ம் நூற்றாண்டுகளில் தமிழ்நாட்டில் பௌத்தம் உயர்நிலையாய் இருந்தது. 6ம்,7ம் நூற்றாண்டுகளில் அதன் அழிவு தொடங்கிவிட்டது. கி.பி. 788 முதல் 820 வரை வாழ்ந்த ஆதி சங்கரர் பௌத்தத்தின் உள்ளுடன்களைத் திருடி இந்து மதத்துக்கு தத்துவத் தயாரிப்புச் செய்து கொடுத்தார். உழைப்பாளி மக்களை சூத்திரர் என்று இழித்து வர்ணச்சிரமத்துக்குப் பலம் சேர்த்தார்.


தமிழ்நாட்டில் புகழ்பெற்ற தமிழ் பௌத்த துறவிகளும் ,தமிழ்பௌத்த நூல்களும் பௌத்த விகாரைகளும் இருந்த காலம் முடிவுக்கு வந்தது.

பெரும் குளங்கள், நீர்ப்பாசன முயற்சிகள் தோன்றி விவசாயம் பெருகியது.வர்த்தகம் பரவத் தொடங்கிப் பெரிய அரசுகள் எழுந்தன. இலங்கை மேலான தென்னிந்தியப் படையெடுப்புக்கள், பாண்டியர்களில் தொடங்கி , பின்பு, சோழர்கள் வரை அதிகரித்தத் தொடங்கியது. சைவசமயம் தமிழ்நாட்டிலும் ,இலங்கையிலும் பரவத் தொடங்கியது.6ம்7ம் நூற்றாண்டுகளிலே தான் திருகோணமலை, திருக்கேதீஸ்வரம், நகுலேஸ்வரம்,முன்னேஸ்வரம் போன்ற கோயில்கள் கட்டப்படுகின்றன.

படையெடுப்புக்களுடனும் ,குடியேற்றங்களுடனும் சைவம் இலங்கையுள் நுழைகிறது. புகழ்பெற்ற சைவக் கோவில்கள் யாவும் கடற் கரைப்பகுதியை ஒட்டிய கரையோரம்களில் ஏற்பட்டமை தற்செயலானதன்று. இந்தியாவிலும் இலங்கையிலும் பெருமதமாக இருந்த பௌத்தம் இலங்கையில் மட்டும் அதுவும் இந்தியப்படையெடுப்புக்கு எட்டாத தென்னிலங்கையில் மக்களிடம் மட்டும் எஞ்சியது. படையெடுப்பாளர்கள் பௌத்த விகாரைகளை அழிப்பது கொள்ளையிடல், பௌத்தர்களைக் கொல்வது நடைபெற்றது. இக்காலப் பகுதியில் இலங்கையில் இருந்த தமிழ்பௌத்தர்கள் மதம் மாறியோ அல்லது தென்பகுதிக்கு தப்பியோடியோ தான் அவர்கள் தப்பியிருக்க முடியும். இக்காலகட்டத்தே தான் இலங்கையில் மகாவம்சம் எழுகிறது என்பது பௌத்த மதக்காப்புக்கும் ,அந்நிய படையெடுப்புக்கு எதிரான படைப்பாகவே அது எழுகின்றது. அது தமிழர்களை எதிர்க்கவில்லை. மாறாக ,பௌத்த விரோதிகளையே எதிர்த்தது.

மகாவம்சம் தமிழர்,சிங்களவர் சண்டை என்பது பிற்கால இனவாதப் பார்வையாகும். அது இந்தியப் படையெடுப்புக்கு எதிராக மக்களை அணி திரட்டும் கருத்தாக இருந்தது.இதன் மூலமே பௌத்தம் இலங்கையில் தப்பிப் பிழைத்தது.

மகாவம்சம் இலங்கையில் மட்டுமல்ல ,இந்தியாவிலும் இன்று வரலாற்று ஆய்வாளர்கள் பயன்படுத்தும் ஆகக் கூடிய வரலாற்றுச் செய்திகளை உடைய நூலுமாகும். இந்தியாவில் பௌத்தத்தை ஆதரிக்கும் நாவலன் ,இலங்கையில் பௌத்தத்ததை எதிர்ப்பதற்கு தமிழ்தேசியவாத உணர்வு தான் காரணமாக உள்ளது.

மகாவம்சத்தை பழிக்காத தமிழரசு மேடைகள் கிடையாது.தன்னை இடதுசாரியாகவும் காட்ட ஆசையுறும் நாவலன் இப்படிப்பட்ட தருணங்களில் தமிழ்தேசியவாதத்துள் குப்புறச் சரிந்து விடுகின்றார். இந்த விடயத்தில் அமிர்தலிங்கம் முதல் நாவலன் வரைக்கும் ஒரே தன்மை தான் வெளிப்படுகின்றது.


மகாயான பௌத்தம் தமிழ்மொழியுடன் நெருங்கிய தொடர்புடையதாகக் கருதப்பட்டதால் மகாயான, பௌத்தம் சார்ந்த மொழியாக இலங்கையில் தமிழும் எதிர்க்கப்பட்டது என்று கருத்துருவம்களை நாவலன் உருவாக்குகின்றார். புத்தர் மரணமடைந்து நூறு வருடங்களிலேயே மகாயானம் என்ற பிரிவு பௌத்தத்தில் தோன்றிவிட்டது. வட இந்தியாவில் குசாணர்கள், மொளரியர்கள், மகாயானத்தைப் பின்பற்றியவர்களே.திபேத் முதல் சீனா வரை பௌத்தம் மகாயான வடிவிலேயே பரவிச் சென்றது. இது இந்து மதச்சாயலுடன் அந்தந்த நாட்டு மரபுகளையும் உள்வாங்கியது. மரபான பௌத்தத்திடம் இல்லாத சிற்பம், ஓவியம், இசை நடனம், கலைகள் ஆகியவற்றையும் வளர்த்தது. ஆனால் ,தமிழ்நாட்டு பௌத்த அறிஞர்கள்தாம் பௌத்த இலக்கியம்கள் தமிழில் எழுதிய போதும் மத நூல்களை பாளி மொழியிலேயே எழுதினர். இவர்கள் பாளி மொழி அறிஞர்களாகவும் இருந்தனர்.அது, அக்காலத்தில் அனைத்து பௌத்த அறிஞர்களதும் பொதுப் பண்பாக இருந்தது.

மேலும் ,இலங்கையில் தேரோவாத பௌத்தம் நிலவிய போதும் மகாயான பௌத்தத்தின் பாதிப்பும் அதில் காணப்பட்டது. இரண்டு பௌத்த மதப் பிரிவுகளும் ஒன்றை-ஒன்று நிறுவப் போரிட்டன அல்லது கடும் மோதல் நிகழ்ந்தது என்பதுக்கு ஆதாரமில்லை. இது ,சைவ சமய எழுச்சி போன்று அல்லாமல் பல நூற்றாண்டு கால நிகழ்வாக படிப்படியாகவும் உணரப்படாமலும் நடைபெற்ற மாற்றங்களாகும்.


இலங்கையில் மகாயான பௌத்தத்தின் பாதிக்கப்பட்ட தேரோவாத பௌத்தம் காணப்பட்ட போதும் அது தனக்கேயுரிய இந்து மத மற்றும் ஆதியான தெய்வம்கள் மரபுகளையும் இணைத்துக் கொண்டே காணப்பட்டது.

தமிழர்களும் ,சிங்களவர்களும் ஒரே பண்பாட்டில் இருந்து பிறந்த மக்கள் என்ற அளவில் நாக வணக்கம் இரு பகுதியினரிடையேயும் காணப்பட்டது. இரு பிரிவு மக்களும் நாக என்பதை தம் பெயர்களில் பரவலாகக் கொண்டிருந்தனர். தமிழர்களிடம் எப்படி குருக்கள் அல்லது பிராமணர் ஆகியோர் மேல் வர்க்கத்தோடும் ,கோவில்களுடனும் தொடர்புடையவர்களாகவும் ; கிராமங்களில் ,பூசாரி போன்றவர்கள் இருந்தனரோ அப்படியே பௌத்தர்களின் மேல் தட்டுடன் பௌத்த பிக்குகள் தொடர்பு கொண்டிருக்க அடிமட்ட மக்களிடம் கிராமங்களில் ‘கப்புறாளை" மற்றும் பெண் பூசாரியான ‘பத்தினி காமியும் இருந்தனர். நாவலன் ஏதோ பௌத்த சிங்களமானது தனித்த தூய வடிவில் வாழ்ந்து, தமிழர்களை ஒடுக்கிக் கொண்டிருப்பதாகக் கதை வடிக்கின்றார்.

சிங்களக் கிராமங்கள் மகாவம்சத்தாலும் ,பௌத்த பிக்குகளாலும் நிரம்பி நிற்பதாயும் வழிகாட்டப்படுவதாகவும் அவர் தீவிரமாய்க் கட்டமைக்கின்றார். ஆனால் ,அது உண்மையல்ல.

பலவகையான பேய்,பூதங்கள் வணங்கப்பட்டன. தமிழர்களிடம் உள்ளது போல இரத்தப்பிசாசு, அக்கினிப்பிசாசு, உதிரவைரவர், உதிரமுனி, இரத்தக்காளி, இரத்தக்காட்டேரி போன்று சிங்கள மக்களிடமும் றீறியகா, மகா கோல சந்நியாகா, ஒட்டிகுமார கீணியம்கா, மகா சோறொன், யச, களுகுமாரயகா,றட்டயகா போன்ற பிசாசுகள் சார்ந்த நம்பிக்கைகள் நிலவின. 12 பிசாசுகள் ஒன்று சேர்ந்து ‘கறாயகு’ என்று அழைக்கப்பட்டது. மனித,மிருக இரத்தம் குடிக்கும் பிசாசுகள் போன்ற புராதன பௌத்தத்துக்கு முந்திய நம்பிக்கைகளும் காணப்பட்டன.
தமிழ் மக்களைப் போன்று மோகினி, கண்ணூறு, பில்லி, சூனியம்,நீர்க் கிரிகைகள்,நம்பிக்கைகளும் நோய்களைக் குணமாக்கும் தெய்வங்களான பத்தினித் தெய்வம் கிரியம்மாமார், சத்பத்தினி என்பன அம்மை, பொக்கிளிப்பான், சின்னமுத்து என்பனவற்றை குணமாக்கும் தெய்வங்களாக நம்பப்பட்டது. பயிர்கள் வளராவிட்டால் மழை பெய்யாவிட்டால் தெய்வக் கோபம்,தெய்வக்குற்றம் இதற்கான கடவுள்கள், கிரிகைகள் இருந்தன. அறுவடைத் தெய்வ வணக்கம் இருந்தது. ஆறு, குளம், மலை, மரவணக்கங்கள் நிலவின.கண்ணகி வழிபாடு தமிழர்கட்கு சமமாக சிங்கள மக்களிடம் நிலவியது.பத்தினித் தெய்வயோ என்று வணங்கப்பட்டது.


கண்ணகி சிங்கள மக்களிடம் கற்புக்கரசியாகவும் ,தெய்வமாகவும் மதிக்கப்பட்டாள். திருமணச் சடங்குகள், மரணச் சடங்குகள், நீர்க் கடன், குளிர்த்திகொடும்பாவி, வீடுகாவல் செய்யும் கிரிகை, கழிப்புக் கழித்தல் என்பன இந்து, பௌத்த சமய நம்பிக்கைகட்கும் மூத்த புராதன மரபுகட்கு உரியவை என்று நம்பலாம்.

கதிர்காமம் ,சிங்கள கப்புறாளையினால் வாய்கட்டிய நிலையில் மந்திரங்கள் எதுவும் இன்றி பூசை செய்யப்படுவதாகும் .இது, தொன்மையான மரவணக்கத்துடன் தொடர்புடையது. இதே போன்றே செல்வச் சந்நிதியிலும் மரவணக்கத்தில் இருந்து வேல் வணக்கம் இறுதியாகக் உருவணக்கத்துக்கு வந்தடைந்தவையாகும். பௌத்தம் கி.மு.3ம் நூற்றாண்டு தேவநம்பிய தீசன் காலத்தில் இலங்கைக்கு வந்தபோது நாகவழிபாடு, இயக்க மற்றும் பூதவழிபாடு,இயற்கை, ஆவிவழிபாடு என்பன நிலவின. பௌத்த மதம் இந்து நம்பிக்கைகளையும் பகுதியாய்க் கொள்வது தவிர்க்கமுடியாத விதியாகியது.பௌத்தம் சமயக்கிரிகைகளை மறுத்த ஒன்று. கடவுள்,ஆன்மா, அவதாரம்,மறுபிறவி, மோட்சம், நரகம், இறந்தோர் வழிபாடு போன்றவை அதற்கு புறம்பானவையே என்றும் எல்லா பௌத்தர்களையும் மகாயானம், தேரோவாதம் என்ற வித்தியாசமின்றி இலங்கையுள் இவை ஆட்கொண்டது. இலங்கையுள் எல்லா பௌத்தர்களும் இந்து தெய்வம்கள், பூதம்,பிசாசுகள்,யோகம், மந்திரம்களை நம்பினர். இவைகள் எல்லாவற்றையும் புத்தரும் ,போதி சத்துவரும் கட்டுப்படுத்துவார்கள் என்று நம்பினர்.


பௌத்தத்  துறவிகள் கலைகள், நாடகம்கள், நடனம் இவைகளை வெறுத்தனர்.

இவற்றை எதிர்த்து எழுதினர். ஆனால் ,சிங்கள கிராம மக்களிடம் ஏராளமான நாடகங்கள், கூத்துக்கள், நடனவகைகள் நிலவின. மந்திரத்தில் பாடல்கள் நிலவின. இயற்கையை வசப்படுத்தும் மந்திர ஆடல் பாடல்கள் நிலவின. கண்டிய நடனம், மலைநாட்டுச் சிங்கள வழிபாடுகள் என்பன பௌத்தத்துக்கு முரணானவையாகவே கொள்ள வேண்டும்.ஆனால் ,இந்தப் பல்பண்புடைய மதப்போக்குகளை நாவலன் ஒற்றைக் கருத்தியலாக பௌத்த வடிவமாக மட்டுமே புரிந்து கொள்கின்றார். இது நாவலனுடைய மட்டுமல்ல சகல தமிழ்த்தேசியவாதப் போக்காளர்களின் வழிவழியாய் வந்த மதிப்பீடுகளுமாகும்.


போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், பிரிட்டிஸ்காரருக்கு எதிராகப் போராடிய சிங்கள, பௌத்த போக்குகள் உள்ளன. கெப்பிட்டிப்பொல போன்ற கிளர்ச்சியாளர்கள் தமிழ்மன்னன் எனக் கருதப்பட்ட கண்டியின் கடைசி மன்னன் சிறிவிக்கிரம ராஜசிங்கனின் வாரிசுகளைப் பதவியில் இருத்தவும் பௌத்த மதத்தைப் பாதுகாக்கவும் பிரிட்டனுக்கு எதிராகப் போராட சபதம் எடுத்தனர். கண்டி மன்னர் சிறிவிக்கிரம ராஜசிங்கன் காலத்தில் தமிழ்மொழி தான் கண்டியில் அரச மொழியாக இருந்தது. அவன் பௌத்த மதத்தைப் பாதுகாத்தவன் !ஆக, பௌத்தம் தமிழ் எதிர்ப்புக் குணத்தைக் கொண்டிருக்கவில்லை. கண்டி தலதா மாளிகையிலிருந்த புத்தரின் புனித தந்த தாது பிரிட்டிஸ் ஆட்சியை எதிர்த்தவர்களின் பிரதான பலமாக இருந்தது. எனவே, பிரிட்டிஸ் அரசு அந்த புத்தரின் புனித தந்த தாதுவைக் கைப்பற்றி பெரும் விழா எடுத்து ஊர்வலமாக எடுத்துச் சென்று மீண்டும் தலதா மாளிகைiயில் வைத்தனர். புனித தந்த தாதுவை யார் வைத்திருக்கின்றார்களோ அவர்களே தம்மை ஆளத்தகுதியுடையவர்கள் என்று கண்டி மக்கள் நம்பினர்.


"இடதுசாரிகள் தாம் சார்ந்த வர்க்கத்தை தேசிய விடுதலை நோக்கில் அணிதிரட்டவில்லை" என்பது நாவலனின் அடுத்த அரசியல் மனக்குறையாகும்.

1970 களில் தமிழ்தேசிய வாதம் ஆயுதமெடுத்த சமயம் ,இலங்கையில் சுயசார்ப்புப் பொருளாதாரத்தைக் கட்டப் போராடிக் கொண்டிருந்த ஒரு இடதுசாரி ஐக்கியமுன்னணி அரசு இருந்தது.

உலகவங்கி,சர்வதேச நாணய வங்கிகளால் கடும் நெருக்கடி தரப்பட்ட  JVP  யின் எழுச்சியால் பலவீனப்பட்ட ஆனால், கிழக்கு ஐரோப்பிய சோசலிச நாடுகட்கு சார்பான அரசாக அது இருந்தது. இதற்கு எதிராகவே தமிழ் பிரிவினைவாத ஆயுதக் கிளர்ச்சி நாச வேலையைத் தொடங்கியது. இதன் மூலம் இலங்கையின் தொழிலாள வர்க்கம் தமிழ், சிங்கள இனவாதத்தின் புதிய பரிமாணத்தின் முன்பு விடப்பட்டது.

அமெரிக்க மசாசூசெட் மாநிலத்தின் "தமிழ்-ஈழ "ஆதரவுத் தீர்மானம் , பிரிட்டனில் குடியேறியிருந்த  யாழ்ப்பாண நடுத்தர வர்க்கத்தின் தமிழ்தேசிய ஆதரவு நிலை ,இவைகளின் ஆதரவு நிலையில் தமிழ் இராணுவக் குழுக்கள் தோன்றுகின்றது.

இலண்டனை தலைமையகமாகக் கொண்ட தமிழ் தேசியவாதிகளின் குழுக்கள் தமிழ் இராணுவக்குழுக்களை ஆக்கவும் ,இராணுவப் பயிற்சி பெற்றுத் தரவும் முனைந்தனர். எனினும் ,தமிழ் ஆயுதக் குழுக்களின் உதிரிகள் தமிழ்நாட்டில் தலைமறைவு வாழ்வுக்கு சென்றிருந்தபோதும் அவர்கள் இந்திய அரசின் கவனத்தைப் பெற்று இருக்கவில்லை. இலங்கையில் மேற்குலக சார்பு யு.என்.பி வந்த பின்பே இந்திய அரசு ஆதரவு தமிழ் இராணுவக் குழுக்களுக்கு கிடைக்கின்றது.


1977 இல் UNP இலங்கையில் ஆட்சிக்கு வந்த பின்பு தான் பயங்கரவவாதத் தடைச் சட்டடம் பிரிட்டனில் ஐரிஸ் மக்களின் போராட்டத்துக்கு எதிரான பயங்கரவாத தடைச் சட்டத்தையொத்ததாகக் கொண்டு வரப்படுகின்றது.

சர்வ வல்லமை படைத்த ஜனாதிபதி ஆட்சிமுறை, சுதந்திர வர்த்தக வலயம் என்பனவும் வருகின்றது. தேர்தலுக்கு முன்பே ஜே.ஆர்க்கும் அமிர்தலிங்கத்துக்கும் இரகசிய அரசியல் கூட்டு இருந்தது. தேர்தலில் தமிழ் தேசியவாதிகள் தமிழ் மக்களை யு.என்.பி க்கு வாக்களிக்கச் செய்து இருந்தார்கள். எதிர்க்கட்சித் தலைவராக அமிர்தலிங்கம் வந்தார். 1977 இல் இலங்கையில் முழு இடதுசாரிகளும் தேர்தலில் தோற்றிருந்தார்கள்.

தமிழ்த் தேசியவாதிகளும், சிங்களத் தேசியவாதிகளுமே பாராளுமன்றத்தில் இருந்தார்கள். ஜே.ஆர் பதவிக்கு வந்தவுடன் இடதுசாரித் தொழிற்சங்கங்களை அழித்து, UNP தொழிற்சங்கங்களை உருவாக்கினார். ஒன்றரை இலட்சம் வேலை நிறுத்தம் செய்த தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்கினார். இந்தச் சமயத்தில் இடதுசாரிகட்கு எதிராக அமிர்தலிங்கம்  JR உடன் ஒத்துழைத்தார்.

தமிழ், சிங்கள இரு பகுதி இனவாதிகளும் ஒன்றாகப் பவனி வந்தார்கள்.

கொழும்புக்கு அமெரிக்காவின்  போர்க் கப்பல் வந்தபோது அமிர்தலிங்கமும் , பிரேமதாசாவும் ஒன்றாக தம்பதிகளாகப் போனார்கள்.

பின்பு UNP  இனக்கலவரத்தை தமிழ்மக்களுக்கு எதிராய்க் கொண்டு வந்தபோது "போர் என்றால் போர் ,சமாதானம் என்றால் சமாதானம் "என ஜே.ஆர் கேட்டபோது யு.என்.பிக்கு வாக்குப் போட்ட தமிழர்களுக்கே அடியும் கிடைத்தது. அமிர்தலிங்கம் ,"ஜே.ஆர் தமிழ்மக்களை ஏமாற்றிவிட்டதாக" பேசத் தொடங்கினார்.

தமிழ்தேசியவாதிகள் ,இடதுசாரிகளை ஆதரிக்கவில்லை என்பது மட்டுமல்ல சிங்கள இனவாதிகளுடன் சேர்ந்து அவர்களை உருக் குலைத்தார்கள். தமிழ்,சிங்கள, முஸ்லிம் இனவாதம் கடந்த அரசியலை முன்னெடுக்க முடியாமல் தடுத்தார்கள். தமிழ்தேசியவாதிகள் தமிழ்ப் பகுதிகளில் கொம்யூனிஸ்டுகளை ஒடுக்கப்பட்ட சாதிகளின் மட்டத்துக்கு தள்ளிவைத்தார்கள்.தீவிர இடதுசாரி எதிர்ப்புக் காட்டப்பட்டது.

 1970 களின் இறுதிப் பகுதியில் வல்வெட்டித்துறையில் தொழிலாளர்பாதை பத்திரிகையை வீடு வீடாக விற்ற புரட்சிக் கம்யூனிசக் கட்சித் தோழர்களை தங்கத்துரையின் ஆட்கள் வில்லுக்கத்தியைக் காட்டி விற்ற பத்திரிகையை திருப்பிக்கொடுத்து ,வாங்கிய 15 சதம் காசையும் திருப்பிக் கொடுக்கும்படி வெருட்டினார்கள்.



யு.என்.பி,தமிழர் விடுதலைக்கூட்டணி காலத்தில் இலங்கைத் தொழிலாள வர்க்கம் ,தான் இதுவரை போராடிப் பெற்ற எல்லாவற்றையும் இழந்து இருந்தது. தமிழ்,சிங்கள இருபகுதி இனவாதிகளும் இணைந்து கூட்டாக இடதுசாரிகளைத் தோற்கடித்து இருந்தார்கள்.

அக்காலத்தில் ,ஜே.ஆரின் நெருங்கிய கூட்டாளிகளாக அமெரிக்க நபர்களான நீலன் திருச்செல்வமும் ,ஜே.ஏ வில்சனும் சட்ட மேதைகள் என்ற பெயரில் இருந்தனர். ஜனாதிபதி ஆட்சிமுறை,பயங்கரவாத தடைச் சட்டம் இரண்டுக்கும் சட்ட வரைவுக்கு உதவியவர்கள் இவர்களே. இத்துடன் இவர்கள் அமிர்தலிங்கத்துக்கும் தமிழர் விடுதலைக்கூட்டணிக்கும் அதே சமயம் நெருக்கமாக இருந்தார்கள்.

அமிர்தலிங்கம் தம்மை UNP ஏமாற்றிவிட்டதாக கூறத் தொடங்கியபோது ,தமிழர் விடுதலைக் கூட்டணியின் இளைஞர்கள் ,அமிர்தலிங்கம் துரோகம் செய்துவிட்டதாகக் கூறத் தொடங்கினர்.

இடதுசாரி அரசின் காலத்தில் ,வலதுசாரி நிலையெடுத்த தமிழ்த் தேசியவாதம் இப்போ வலதுசாரி யு.என்.பி அரசு காலத்தில் இடதுசாரிப் பக்கம் சாயத் தொடங்கியது. தமிழ் இளைஞர் பேரவையில் இடதுசாரிப் பிரிவுக்கு சந்ததியார் போன்றவர்களும் வலதுசாரிப் பிரிவுக்கு மாவை சேனாதிராசா போன்றவர்களை உள்ளடக்கிய பிரிவுகளும் உடைவுகளும் ஏற்பட்டன. இரத்தினசபாபதி, சந்தததியார், விசுவாந்ததேவன் போன்றவர்களின் இடதுசாரித் தமிழ்த் தேசியவாதப் பிரிவுகள் தோன்றின. அமிர்தலிங்கம் இளைஞர்களிடையே இடதுசாரிகள் ஊடுருவிவிட்டதாய்க் குறை கூறியதுடன் ,தான் கொல்வின், என்.எம். இடம் மாக்சியம் பயின்றதாகப் பேசத் தொடங்கினார்.

இடதுசாரிப் போக்குடையவர்களைப் பலவீனப்படுத்த தமிழர் விடுதலைக் கூட்டணி வட்டுக்கோட்டை மாநாட்டில் ‘விஞ்ஞான சோசலிச தமிழ் ஈழம்’ பற்றி தீர்மானம் போடவேண்டி வந்தது.


மேற்குலகச் சார்பு யு.என்.பி யின் காலத்தில் தான் இந்தியா தமிழ் இயக்கங்கட்கு ஆயுதப்பயிற்சியும், ஆயுதங்களும் தந்தது. இதன் நோக்கம் இலங்கை அரசின் மேற்குலக சார்பு நிலையை தடுப்பதும், தமிழ் ஆயுத இயக்கம்களை அதற்கேற்ப பயன்படுத்துவதும் தான்.

அப்போது, சோவியத் யூனியன் இருந்தது.

இந்திய சோவியத் உறவுகள் நிலவின. இந்திய ஸ்டாலினிசக் கட்சிகள் சில இந்திய அரசையும் ,இடதுசாரி அரசாகக் கணித்த காலமது.எனவே, யு.என்.பி வலதுசாரி அரசுக்கு எதிராக தமிழ் இயக்கம்கள் சிவப்புச் சாயத்தை தம்மேல் அப்பிக் கொள்ள முயன்றன. பாலசிங்கம் போன்றவர்கள் சோசலிச நோக்கில் தாம் செயற்படுவதாக எடுத்து, விளக்கம் தந்தனர்.

EPRLF இல் பத்மநாபா, புளொட்டில் சந்ததியார், ஈரோஸ், என்.எல்.எவ்.ரி என்போர் சோசலிசத் தத்துவம்கள் சிங்கள மக்களை இணைப்பது போன்றவற்றையும் பேசத் தொடங்கினர்.

ஆனால் ,தமிழ் இயக்கம்கள் கையில் ஆயுதம் எடுத்தவுடன் சகலதும் மாறத் தொடங்கின. அவர்கள் ,இடதுசாரிப் போக்குடையவர்களையே உள்ளும் ,புறமும் அழிக்கத் தொடங்கினர்.

புளொட் டுடன் வலதுசாரி இராணுவவாதம் பெருத்து ,அமைப்புள் அழிப்புக்கள் ஆரம்பமாகின.

"புளொட் ஒரு சோசலிச இராணுவமா? அல்லது முதலாளிய இராணுவமா? " என்று கேள்வி எழுப்பியவர்கள் முதல் சந்ததியார் வரை அழிக்கப்பட்டனர்.

 ஈ.பி.ஆர்.எல்.எவ் இல் பத்மநாபா போன்றவர்கட்குப் பதிலாக வரதராஜப்பெருமாள், டக்ளஸ் போன்ற வலதுசாரிகள் பலம் பெற்றனர். ஈரோஸ் இன் இரத்தினசபாபதி போன்றவர்கள் ஓரம் கட்டி தள்ளப்பட்டனர். இடதுசாரிச் சிந்தனையுடையவர்கள் குழப்பங்களை மூட்டுபவர்களாகவும் ஒற்றுமையைக் குலைப்பவர்களாகவும் தமிழ் வலதுசாரி விளக்கம்கள் தரப்பட்டன.

சந்ததியார், சுந்தரம், விசுவானந்த தேவன் போன்றவர்களும் வியானந்தன், அண்ணாமலை உட்பட பல கொம்யூனிஸ்டுகளும் கொல்லப்பட்டனர்.

சோசலிசம் பேசிய ஈரோஸ் ,அனைத்து மக்களின் அடிமைச் சங்கிலியையும் அறுப்போம் என்று சிங்கள மொழியில் கூட வானொலி நடத்திய புளொட், சிஐஏ [CIA ]உளவாளி என்று அலன் தம்பதிகளைக் கடத்தி உழைப்பாளர்களின் அமைப்புக்ளை உருவாக்கிய ஈ.பி.ஆர்.எல்.எவ், மற்றும் என்.எல்.எவ்.ரி என்பன தமிழ் வலதுசாரி அரசியலுக்கும் முதலாளியப் போக்குகட்கும் சரியத் தொடங்கின.


இதன் மூலம் ஆரம்பகாலத்தில் இடதுசாரி அவியல் போக்குகள் முடிந்து ,தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு சமமான அரசியல் போக்கு தொடங்கியது.

இதற்கான முக்கிய காரணி யாழ்.நடுத்தரவர்க்க அரசியல் புலமாகும். இலங்கையில் முஸ்லிம், சிங்கள மக்களை விட யாழ்.தமிழர்கள் மத்தியிலேயே நடுத்தரவர்க்கம் பலமாக இருந்தது. இவர்கள் இயற்கையாகவே மேற்குலக சார்பும் ,ஆங்கிலம் படித்தவர்களே கல்வியாளர்கள் என்ற பெருமையும் கொண்டவர்கள். இவர்கள் சிங்களத்தை மட்டுமே எதிர்த்தவர்கள், இவர்கள் அப்புக்காத்து, டாக்குத்தர், எக்கவுண்டன், என்ஜினியர், உத்தியோகம் பெறப் படித்தவர்கள் இதனால் சிங்கள மக்களை விட வெளிநாடுகளில் வாழக் கொடுத்துவைத்தவர்கள், பிரிட்டனில் வீட்டில் கூட ஆங்கிலம் பேசிக் கொண்டே தமிழ் மொழி உரிமைக்குப் போராடியவர்கள்.தமிழ் தேசியவாதிகளை இலங்கையில் வளர்த்து வழிகாட்டியதில் இவர்களே பெரும் பங்கு கொண்டிருந்தனர். உண்மையில் தமிழ்தேசியவாத அரசியல் என்பது சாதாரண தமிழ்மக்களின் அரசியலாகத் தொடங்கவில்லை.


நாவலன் ஏனைய தமிழ்தேசியவாதிகளைப் போல் அவர்கள் வழியில் இடதுசாரிகளைக் குற்றம் சொல்கிறார். ஏகாதிபத்தியத்தின் பிளவுவாத அரசியலில் இருந்து புறப்பட்ட பிரிவினைப் போக்கை இடதுசாரிகள் ஆதரித்து இருக்க வேண்டுமா? இடதுசாரிகள் தலைமை தரத்தக்க அகமற்றும் புறவயமான சூழல்கள் இருந்ததா? தமிழ் யாழ்ப்பாண நடுத்தரவர்க்க அரசியலின் தமிழ்ஈழம் வர்க்க அடிப்படையில் இடதுசாரிகளை எப்படி ஏற்கும்?

ஜே.ஆர் ஆட்சியின் தீவிர வலதுசாரி அரசியல் நிலைமையில் அதற்கு எதிராக தமிழ்த்தேசியம் தற்காலிக முற்போக்கு முகம் காட்டியபோதும் அது ,எந்த நேரத்திலும் கழுத்தறுத்து விடும் போக்கிலேயே இருந்தது.

 தமிழ்த்தேசியவாதத்தின் பின்னால் போனவர்களின் பெரும்பகுதி மாவோவாதிகளாக இருந்தனர். மாவோவாதம் என்பது ஒரு விவசாயக் கோட்பாடு என்ற அளவில் தேசியவாதத்துக்கும் நெருக்கமாக இருந்தது. இன்று புதுவை இரத்தினதுரை பாலகுமார் வரையிலான மாவோவாதிகள் புலிப்பாசிஸ்டுகளாக பரிணாமம் பெற்றதில் இவை முடிவடைந்தன.

இடதுசாரிகள்,தொழிற்சங்கம்கள் தமிழ்பரப்பில் அழிக்கப்பட்டது என்பது புலிப்பாசிசம் சார்பான வலதுசாரிப் போக்குகட்கு பலம் சேர்த்து வெறும் இராணுவாதக் குழுக்களாக இவை வளர இடம் விட்டது. அரசியலின் இடத்தை ஆயுதம்கள் கைப்பற்றிக் கொண்டன. நாவலன் தனது கட்டுரையில் இடதுசாரிகள் பற்றிய எந்தத் தெளிவான விளக்கத்தையும் வைக்கவில்லை , எதையும் வரையறுத்துச் சொல்லவுமில்லை. எல்லாம் போகிற போக்கில் அவசர கோலத்திலான விளக்கங்களாகவேயிருந்தன. தமிழ்த்தேசிய விடுதலை, தென்னிலங்கை இடதுசாரிகளுடன் போயிருக்கவேண்டுமா? இலங்கை தழுவிய புரட்சிக்கு அவர்களுடன் கூட இணைந்து ஆயத்தம் செய்திருக்கவேண்டுமா? வர்க்கப் போராட்டத்தையும் இனவாதிகளின் ஆயுதமேந்துதலையும் ஒன்று சேரப் போட்டு நாவலன் குழப்பியிருக்கின்றார்.


தமிழ்ப்பாசிசம் வந்து வடக்கு கிழக்கில் இருந்த 50 வருடத்துக்கும் மேற்பட்ட இடதுசாரிகளையும் தொழிற்சங்கங்களையும் ஒன்றுவிடாமல் அழித்தார்கள். இலங்கையில் தொழிலாளர் இயக்கம் இல்லாத பகுதிகளாக இவை ஆக்கப்பட்டன. கொல்லப்பட்ட இடதுசாரிகள் தவிர மிச்சமானவர்கள் தென்னிலங்கைக்கும் ,வெளிநாடுகட்கும் தப்பியோடினார்கள்.

தமிழ்ப் பகுதிகளில் தொழிலாளர்கட்கு வேலை நிறுத்தம் செய்ய சுதந்திரமான தொழிற்சங்க இயக்கம் கட்டக் கூட உரிமை இல்லை. இலங்கையில் கிட்டத்தட்ட 100 வருடம் கொண்டாடிய மே தினத்தைக் கூட இடதுசாரிகளால் தமிழ்ப்பகுதிகளில் நடாத்தமுடியவில்லை. தமிழ்ப்பகுதிகளில் இயங்கிய ஒருசில தொழிற்சாலைகள் முதல் கூட்டுறவுத்துறை வரை புலிகளால் சூறையாடி அழிக்கப்பட்டதால் பல பத்தாயிரம் தொழிலாளர்கள் வாழ்விழந்தனர்.

தேசிய இனச் சுயநிர்ணய உரிமை பேசும் நாவலன் ,ஏன் தொழிலாளர்களின் சுயநிர்ணய உரிமை பற்றிப் பேசவில்லை. தமிழ் பாசிசத்தால் அழிக்கப்பட்ட இடதுசாரிகளை ,தமிழ்தேசிய வாதத்தால் இல்லாமல் செய்யப்பட்ட சோசலிசப் போக்குகளை நாவலன் குற்றவாளியாய்க் காட்ட முயல்கின்றார்.

கொலையாளியை விட்டு விட்டு ,கொலையுண்டவரை குற்றம் சொல்கிறார்.

 தமிழ் ஜனநாயக சக்திகளை ,சகோதர இயக்கம்களை, புலிப்பாசிஸ்டுகள் அழித்தமைக்கு இடதுசாரிகளா பொறுப்பு?

 தென்னிலங்கையில் குண்டு வெடிப்புக்கள் நிகழ்த்தி ,பல ஆயிரம் சிங்களப் பொதுமக்களைக் கொன்றமைக்கு இடதுசாரிகளா காரணம்?

கிழக்கில் சிங்கள, முஸ்லிம் மக்களைப் புலிகள் கொத்துக் கொத்தாய்க் கொன்றார்களே அதற்கு இடதுசாரிகளா பொறுப்பு எடுக்கவேண்டும்?

தமிழ்தேசியவாதிகள் இன்று சர்வதேச சமூகம் என்று ஏகாதிபத்தியத்தின் பின்னால் அலைகிறார்களே அதற்கு சோசலிஸ்டுகளா சொல்லிக் கொடுத்தார்கள்?

நாவலன் தேசியத்துக்காக இடதுசாரிச் சிந்தனையை பலி தரும் மனிதராகவே எங்கும் உலாவுகிறார். தேசியத்தை எதிர்த்தே சோசலிசம் பிறந்தது என்பதை அவர் மறவாதிருப்பது நல்லது.


தமிழ்தேசியப் பிரச்னையில் ‘இடதுசாரிகள் தவறிழைத்தார்கள் என்ற முறைப்பாட்டை நாவலனும் வைக்கத் தவறவில்லை. ஒரே சமயத்தில் தமிழ்த்தேசியவாதத்தின் அனுதாபியாகவும் ,அதே சமயம் இடதுசாரியாகவும் இருக்க முடியும் என்று நாவலன் நம்புகின்றார்.

தேசியவாதத்தை எதிர்த்தே சோசலிசம் பிறந்தது என்பது அவரது கவனத்துக்கு எட்டாமல் போயிருக்கலாம். இலங்கையில் தொழிலாளர்களையும் ,இடதுசாரி இயக்கங்களையும் வளரவிடாமல் தடுக்கவே சிங்கள தேசியவாதம் போல் தமிழ் தேசியவாதமும் எழுப்பப்பட்டது.

இடதுசாரிப் போக்குகளைப் பலவீனப்படுத்திய முக்கிய காரணிகளில் ஒன்றாக தமிழினவாதம் நாவலனுக்குப் படவில்லை. மாறாக தமிழ், சிங்களத் தேசியவாதப் போக்குகளால் பாதிப்புற்ற இடதுசாரிகளையே எதிரிகளாக்கும் அரசியலுக்கு அவரும் போகிறார். இடதுசாரிகளான பிலிப் குணவர்த்தனா அதன் பின்பு 1970 களில் இடதுசாரி ஐக்கிய முன்னணி என்பன சோசலிசத்துக்கு முந்திய சமுதாய நிலைமைகளைப் படைக்கும் தேசியப் பொருளாதாரத்தைக் கட்டும் போராட்டத்தை நடத்தியவர்கள் என்பதையும் அவர் கண்டாரில்லை.

 தமிழினவாதம் மேல் சந்தேகமற்றவராக நாவலன் இயக்கப்படுகின்றார்.

ரஸ்ய,சீன ஜே.வி.பி என்று ஸ்டாலினிச, மாவோயிச இயக்கங்களை ஒன்று கலந்தடித்த அவர் ,இலங்கையில் முதன் முதலில் தோன்றிய மாக்சிய இயக்கமான எல்.எஸ்.எஸ்.பி யை பிலிப் குணவர்த்தனாவை கொல்வின் ஆர்.டி சில்வாவைப் பற்றிய ஒரு சிறு ஞாபகமூட்டலுக்கு கூட வரமுடியாதளவு இடதுசாரி இயக்கங்கள் பற்றிய தகவல் தட்டுப்பாட்டால் ,வரலாற்றுணர்வுப் போதாமையால் நாவலன்  ஆட்கொள்ளப்பட்டுள்ளார்.

 நாவலன் தான் வாசித்தறியாத,கேட்டறிந்திராத தத்துவப் பிரதேசங்களில் வழி தவறி அலைகிறார். பொருளறியாமலே வார்த்தைகளில் சண்டையிடக்கூடாது. சொற்களின் வரலாற்று பின்புலத்தை அது உருவான அவசியக் காரணிகளை விளங்கி மாக்சியச் , சொற்பதம்களை உணர்ந்து, பொருள் முதல்வாதத்தால் ஊடுருவிப் பார்த்து எழுதவேண்டும்.

நாவலன் மாக்சியச் சொற்பிரயோகம்களை தாராளமாக வீணடித்து இருக்கின்றார்.

தொடரும்...


தமிழரசன்,
பெர்லின் .


 



Keine Kommentare: